Tamilnadu

“கஞ்சாவை ஒரே இடத்தில் ஸ்டாக் வைக்கவேண்டாம்”: சமூகவிரோதிகளுக்கு அறிவுறுத்தும் போலிஸ்-தேனி அருகே அதிர்ச்சி!

தேனி மாவட்டம் போடி அருகே கஞ்சா விற்பனை செய்தவரிடம் போலிஸார் பணம் கேட்டு மிரட்டியதாக ஆடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி தனிப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ-ஆக பணிபுரியும் கருப்பையா, காவலர் குமார் ஆகியோர் போடி அருகே உள்ள குரங்கணி பகுதியில் மது, கஞ்சா விற்பனை செய்து வந்த ராமு என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வாட்ஸ்- அப்பில் ஆடியோ பதிவு ஒன்று பரவியது.

கஞ்சா விற்பனை செய்பவரிடம் போலிஸார் பேசுவதாக உள்ள அந்த ஆடியோவில், “மது, கஞ்சா ஆகியவற்றை தொடக்கத்திலேயே அதிகமாக விற்கக் கூடாது. கொஞ்சம், கொஞ்சமாக அவற்றின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். ஒரே இடத்தில் மொத்தமாக ஸ்டாக் வைத்துக் கொள்ளக்கூடாது. ரெய்டு வராமல் இருக்க மாதம் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் வழக்கு பதிவு செய்வோம்” என்று போலிஸார் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எஸ்.பி தனிப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ கருப்பையாவை வருசநாடு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து தேனி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, கஞ்சா விற்பனையை தடுத்து மக்களைக் காக்கவேண்டிய காவல்துறையினரே, கஞ்சா விற்பனைக்கு துணைபோவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.