Tamilnadu

“இறந்தவரின் உடலை பொது வழியில் எடுத்துச் செல்ல தடை”: தீண்டாமை கொடுமையால் தவிக்கும் அருந்ததியின மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லம்பேட்டை கிராமத்தில் 6 தலைமுறைகளாக அருந்ததிய இனமக்கள் 40க்கும் மேற்ப்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஆறு தலைமுறைகளாகவும்இறந்த உடலை பொது வழியில் எடுத்துச் செல்ல ஆதிக்கசாதியினர் தடை விதித்திருந்ததால் இறந்த உடலை சுடுகாட்டிற்க்கு எடுத்து செல்ல சரியான பாதை இல்லாமல் அவதியுற்று வந்தனர்.

தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில், நேற்று இறந்த 70 வயது மதிக்கத்தக்க லட்சுமி என்பவரின் உடலை பொது வழியில் எடுத்துச் செல்ல ஆதிக்கசாதியினர் மறுப்பு தெரிவித்ததால், கொட்டும் மழையிலும் இடுப்பளவு சேற்றில் தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 6 தலைமுறைகளாக மனு அளித்தும் பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காத ஆதிக்கசாதியினர் மீது மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதே இது போன்ற அவல நிலைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் இதே ஊத்துக்கோட்டையில் அருந்ததியினர் சமூகத்தினர் பொது வழியில் செல்ல தடைவிதிக்கப்பட்ட அவலம் குறித்து கலைஞர் செய்திகளில் செய்தி ஒளிபரப்பியதால், அருந்ததியின மக்களுக்கு பொது வழியை ஏற்படுத்த வருவாய் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு தீண்டாமைக் கொடுமை நடந்துள்ளது. இதனையும் சரிசெய்ய மாவட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என இந்த செய்திகள் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

Also Read: கலைஞர் செய்திகள் எதிரொலி.. அருந்ததியின மக்களுக்கு பொதுவழியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த வருவாய் துறை!