Tamilnadu

ரூ 1,165 கோடி சாலை டெண்டரில் ஊழல் அம்பலம்: செட்டிங் இல்லையென முதல்வரால் கூற முடியுமா? - அறப்போர் இயக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் டெண்டர்களில் செய்துள்ள ஊழல் முறைகேட்டுக்கு முகாந்திரம் உள்ளதை அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், “ரூ 1,165 கோடி, 462 கி.மீ தஞ்சாவூர் சாலைகள் PBMC டெண்டரை Area Based Comprehensive Road Improvement, Strengthening and Maintenance(AB-CRISM) என்று பெயர் மட்டும் மாற்றி நெடுஞ்சாலை துறை அக்டோபர் மாதம் வெளியிட்டதை கடந்த பத்திரிக்கை செய்தியில் வெளியிட்டோம். ரூ.656 கோடி 208 கி. மீ சாலை AB-CRISM டெண்டராகவும் ரூ 494 கோடி , 254 Km சாலை AB-CRISM டெண்டராகவும் இரண்டாக பிரித்து போட்டுள்ளார்கள்.

இந்த டெண்டர்கள் யாருக்கு செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று அறப்போருக்கு கிடைத்த தகவல்களையும் டெண்டர் திறப்பதற்கு முன்பாகவே நெடுஞ்சாலை துறை செயலருக்கும் நிதித்துறை செயலருக்கும் அறப்போர் இயக்கம் அனுப்பியிருந்தது. நாங்கள் டெண்டர் திறப்பதற்கு முன்பாக நெடுஞ்சாலை துறை செயலருக்கு டெண்டர் செட்டிங் பற்றி குறிப்பிட்டு அனுப்பிய அதே நிறுவனங்கள் டெண்டர்களில் வெற்றிபெற்றுள்ளது.

தெளிவாக இந்த டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகிறது. ஊழல் முறைகேடு நிறைந்த இந்த டெண்டர்களை நெடுஞ்சாலை துறை செயலர் என்ன செய்ய போகிறார்? இது e-டெண்டர் என்றும் டெண்டர் திறக்கும் வரை யார் போட்டி போடுவார்கள் என்று யாருக்குமே தெரியாது என்றும் நேற்று சொன்ன முதலமைச்சர், நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் உள்ள நெடுஞ்சாலை துறையில் இந்த ஒரு நிறுவனம் தான் வெற்றி பெரும் என்று அறப்போர் இயக்கத்தால் மட்டும் டெண்டர் திறப்பதற்கு முன்பாகவே எப்படி துல்லியமாக சொல்ல இயல்கிறது என்பதை விளக்குவாரா?? நெடுஞ்சாலை துறையில் டெண்டர் செட்டிங் நடக்காமல் இது சாத்தியமே இல்லை என்பதை ஒப்புக் கொள்வாரா?” எனக் குறிப்பிட்டுள்ளது.

Also Read: “அ.தி.மு.க ஆட்களுக்கு இது டெண்டர் ஆட்சி; தமிழ்நாட்டு மக்களுக்கு இது தெண்ட ஆட்சி” - மு.க.ஸ்டாலின் விளாசல்!