Tamilnadu

வலுப்பெற்றது புரெவி புயல் : நாளை 6 மாவட்டங்களுக்கு அதி கனமழை, 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்தது, இதற்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது இன்று பாம்பனுக்கு கிழக்கே தென் கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கில் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையை கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக் கடல், குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.