Tamilnadu

“விவசாய விரோத முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் அ.தி.மு.க அரசை எதிர்த்து போராட்டம்" : ஒருங்கிணைப்புக்குழு

பா.ஜ.க அரசின்‌ வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட‌ ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதன் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், “பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத‌‌ சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் காட்டுமிராண்டித்தனமாக அடக்குமுறையை ஏவுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்க பிரதமர்‌ மோடிக்கு நேரமில்லை. விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது எந்த அமைச்சரும் வந்து சந்திக்கவில்லை.

எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார். நாட்டு மக்களை கொரோனாவை காட்டி மத்திய அரசு அடக்க நினைக்கிறது. டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து டிசம்பர் 2 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்யும் இடங்களில் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும்.

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்றால் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளோம். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அ.தி.மு.க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த நிலைப்பாட்டை எடப்பாடி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் தமிழக அரசையும் எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: டெல்லியில் 10 டிகிரி செல்சியஸ் குளிரிலும் போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு