Tamilnadu

ஒருபுறம் புயல் பாதிப்பு; மறுபுறம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: பேரிடரிலும் கல்லா கட்ட துடிக்கும் மோடி அரசு

உலகம் முழுவதுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், தற்போது மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் விலைவாசி உயர்வினை மோடி அரசு கட்டுப்படுத்தாதன் விளைவு, மக்கள் மோசமான நிதி நிலைமையை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், பெட்ரோல் டீசல் விலையை வேறு நாள்தோறும் அதிகரிக்கின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.

ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த நிலையில் மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.

அதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், இன்றைய பெட்ரோல் விலை 84.93 ரூபாயாக உள்ளது. நேற்று 84.77 ரூபாயாக இருந்ததில் இருந்து 15 காசுகள் உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை இன்று 77.33 ரூபாயாக உள்ளது. நேற்று 77.10 ரூபாயாக இருந்ததில் இருந்து 23காசுகள் டீசல் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்வால் சாமானிய மக்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, நாளுக்கு நாள் சில்லரை வகையில் விலை அதிகரித்தாலும், மாதம் முழுவதும் பார்க்கும் பொழுது விலையை சமாளிக்க முடியவில்லை என சாமானிய மக்கள் கூறுகின்றனர்.

வேலை ரீதியாக நீண்ட பயணம் மேற்கொள்ளும் அன்றாட வேலை செய்பவர்களும் தங்களால் இந்த விலையேற்றத்தை சமாளிக்க முடியவில்லை என கூறுகின்றனர். இந்த நிலை நீடித்தால், வாகனத்தை விட்டு சைக்கிளில் தான் பயணம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Also Read: நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு பசுமை வரியை 3 மடங்கு உயர்த்திய அ.தி.மு.க அரசு: தவிப்பில் வாகன ஓட்டிகள்!