modi
Tamilnadu

“நாட்டுக்கே வழிகாட்டும் தமிழகம் ஒருபோதும் பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்காது” - பி.ஆர்.பாண்டியன் பேட்டி!

வட மாநிலங்கள் வேண்டுமானால் பா.ஜ.கவிற்கு சாதகமாக இருக்கலாம். தமிழகம் ஒருபோதும் பா.ஜ.க-விற்கு ஆதரவாக இருக்காது. அதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலே உதாரணம் என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள இந்த நிலையில், மத்திய அரசு தமிழகத்தில் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகளுக்கு எதிராக ஹைட்ரோ கார்பன் திட்டம், வேளாண் சட்டம் என பல்வேறு சட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.

தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த பின்பும், மத்திய அரசு காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வரும் ஜனவரி மாதம் முதல் தமிழக வரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

தமிழகத்தில் உள்ள மீனவர்கள் முதல் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். சட்டமன்றத் தேர்தல் களம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

மக்கள் போராட்டம்தான் தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை நிர்ணயிக்கும். கடந்த காலத்தில் மிகப்பெரிய அனுபவத்தை பா.ஜ.க அரசு தமிழகத்தில் சந்தித்துள்ளது. பா.ஜ.கவிற்கு யார் துணை போனாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலே உதாரணம்.

வடமாநிலங்கள் வேண்டுமானால் பா.ஜ.கவிற்கு சாதகமாக இருக்கலாம். இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய விழிப்புணர்வு பெற்ற தமிழகம் ஒருபோதும் பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்காது.”என பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

Also Read: தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு: காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்க ONGC ஒப்பந்தம்!