Tamilnadu

ராஜேந்திர பாலாஜி சொந்த மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தால் தவிக்கும் கிராம மக்கள்: கண்டுகொள்ளாத அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், மறவர் பெருங்குடியில் உள்ள பெரிய ஓடையில் மழைநீர் வரத்து அதிகமானதால் காட்டாற்று வெள்ளம் உருவாகி, தரைப்பாலம் மூழ்கி பாலத்தின் மேலே வெள்ள நீர் செல்கிறது.

இந்நிலையில், வெள்ள ஆபத்தை உணராமல் அப்பகுதி மக்கள் பாலத்தை கடந்து செல்கின்றனர். ஏற்கனவே சென்ற முறை வெள்ளம் வந்தபோது இரண்டு இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே இதுபோன்ற ஆபத்தான வகையில் தரை பாலத்தை கடந்து செல்வதால் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் கமுதி , கானாவிலக்கு உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்ல முடியும்.

சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெறுவதால் இந்தப் பாலம் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதானமாக அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இது போன்று அடிக்கடி தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே அப்பகுதியில் நிரந்தரமாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இதுதொடர்பாக பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதுமட்டுமல்லாது, மறவர்பெருங்குடியில் உள்ள பெரிய ஓடையில் முறையாக ஏரி தூர்வாரும் பணி நடைபெறாததால், தரைப்பாலத்தில் இருந்து தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது” என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு: காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்க ONGC ஒப்பந்தம்!