Tamilnadu

பத்மநாமபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ முகமது இஸ்மாயில் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பத்மநாமபுரம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.முகமது இஸ்மாயில் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க,ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வாழ்நாளெல்லாம் எளிமையையும் நேர்மையையும் கடைப்பிடித்த பண்பாளர் - பத்மநாமபுரம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.முகமது இஸ்மாயில் அவர்களது மறைவு; அரசியல் - பொதுவாழ்வுக் களத்தில் பேரிழப்பாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரமான குளச்சலில் பிறந்த முகமது இஸ்மாயில் அவர்கள், குளச்சல் முஸ்லிம் சமூகத்தின் முதல் பட்டதாரி, அதுவும் முதுகலை பயின்ற சட்டப் பட்டதாரி என்ற பெருமைக்குரியவர்.

கல்லூரிப் பருவத்திலேயே பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்வுக்கு வந்த அவர், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் அங்கம் வகித்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் பொதுத்தொண்டாற்றியவர்.

பல பிரதமர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தும்கூட, தக்கலை நகரில் ஒரு வாடகை வீட்டில் மிக எளிமையாகவே வாழ்ந்த பெருந்தகையாளர் அவர்.

குளச்சல் நகராட்சித் தலைவராக இருந்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றியவர். பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதியின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதுடன், பள்ளிக்கூடம், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகளைப் பொதுமக்களுக்குப் பெற்றுத் தருவதில் உறுதியோடு இருந்தவர்.

தூய்மையும் தொண்டறமும் கொண்ட முகமது இஸ்மாயில் அவர்களின் பொதுவாழ்வுப் பணியைப் பாராட்டி, "கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் கல்வி அறக்கட்டளை" இவருக்கு, "அரசியல் நேர்மையாளர்" எனும் விருது வழங்கிச் சிறப்பித்தது.

எளிமையின் சின்னமாக - நேர்மையின் சிகரமாக - அனைத்துத்தரப்பு மக்களின் அன்பிற்குரியவராக விளங்கிய பி.முகமது இஸ்மாயில் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நாடு முழுவதும் ஒரே தேர்வு; மத்திய கல்வி நிலையங்களுக்கு தனி தேர்வா? இது பச்சை சர்வாதிகாரம் - மு.க.ஸ்டாலின்