Tamilnadu

செல்வமுருகன் கஸ்டடி மரண விவகாரம் : அதிர்ச்சி தரும் புதிய ஆதாரங்களை வெளியிட்ட வேல்முருகன்!

நெய்வேலி முந்திரி வியாபாரி மரணம் தொடர்பாக புதிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

முந்திரி வியாபாரி செல்வமுருகன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வழக்கு தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்புடைய ஆதார வீடியோ பதிவுகள் ஊடகம் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதேபோல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதிக்கு முன்னால் காவல்துறையினர் அடகுக் கடைக்கு சென்று நகைகளை பறிமுதல் செய்யும் சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும்போது காவல்துறை பொய் வழக்கு போட்டுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பணியிட மாற்றத்தில் இருந்த ஆய்வாளர் வழக்கு தொடர்பான சிசிடிவி பதிவுகளை காவல்துறை உதவியுடன் கைப்பற்றி சாட்சியங்களை அழிக்க முயற்சிகள் செய்து வருவதால் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விரைந்து விசாரணை செய்து சாட்சியங்களை காப்பாற்ற வேண்டும்.” என வலியுறுத்தினார்.

மேலும், இந்த வழக்கு தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகள் காவல் துறையினர் உள்ளிட்ட அனைவரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் ஆளுங்கட்சியின் துணைகொண்டு காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபடுவது தெரிந்தும் முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: செல்வமுருகன் கஸ்டடி மரணத்தில் ஆளுங்கட்சி ஒப்பந்ததாரருக்கு தொடர்பு- வேல்முருகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!