Tamilnadu

அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்த பின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் அரசு.. இதுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

மேலும் இரண்டு நாட்களாக இரவும், பகலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதேபோல் தொடர்ந்து மழை நீடித்தால் அடையாற்றில் முழு கொள்ளளவு நிரம்பி கரையோரம் உள்ள வரதராஜபுரம், லக்ஷ்மி நகர், முடிச்சூர், பி.டி.சி கோட்ரஸ், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் போல் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து அடையாற்றில் தண்ணீர் சீராக செல்வதற்கு ஆற்றில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.