Tamilnadu

“ஆம்னி பேருந்துகள் வசூல் வேட்டை - கட்டணக் கொள்ளையால் மிரண்டு போன பயணிகள்” : கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பதற்காக முண்டி அடித்துக்கொண்டு அரசு பேருந்தில் இடம் பிடிக்கலாம் என்று போனால் ஒவ்வொரு வருடமும் பொது மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

இதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை நிர்ணயத்தை விட அதிகமாக விற்கு அவலம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் அதிகப்படுத்தியுள்ளதா? அதிக கட்டணத்தை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இதுக்குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.

அனைவரும் எதிர்பார்த்த தீபாவளி நெருங்கி வந்துவிட்டது. சொந்த ஊரிலிருந்து பல்வேறு ஊர்களுக்குப் வேலைக்காக சென்றவர்கள், ,பண்டிகையை அன்று ஆவது குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்று நினைப்பார்கள். எவ்வளவு பணம் செலவு செய்தாவது சொந்த ஊருக்கு போக வேண்டும் என்று தொங்கி கொண்டு பேருந்தில் பயணம் செய்தவர்கள் எத்தனையோ பேர்.

ஆனால் இந்த தீபாவளி கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகையானது நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட இந்த ஆண்டு குறைவான பேருந்துகளையே தமிழக அரசு இயக்குகிறது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்கவில்லை என்றால், அடுத்த வினாடி மக்கள் நாடுவது ஆம்னி பேருத்தை தான். பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உச்சத்தை தொடும். எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று அதிக தொகையை செலித்தி பயணம் செய்வார்கள்.

இதனை தடுக்க பல எச்சரிகை அறிவிப்புகள் கொடுத்தாலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டு குறைந்தளவே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாவும், கொரோனா வைரஸ் தாக்கதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பவில்லை, கல்லூரிகள் இன்னும் இயங்கவில்லை எனவே இந்த ஆண்டு தீபாவளி பொறுத்தவரை ஆம்னி பேருந்து தொழில் பெரும் நஷ்டம் தான் என்கிறார்கள் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்பவர்கள் ஆன்லைன் மூலமாக தான் பயண சீட்டை பெறுகிறார்கள். என்ன தான் ஆம்னி பேருந்து சங்கங்கள் கட்டணம் நிர்ணயத்தாலும், தனியார் பேருந்து இனையதளத்தில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபுறம் நேரில் சென்று பயண சீட்டை வாங்குபவர்களுக்கு மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.