Tamilnadu

சென்னையில் மிதமான மழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் - அடுத்த 2 நாட்களின் வானிலை நிலவரம்!

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக , அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை,சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஒருஇரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 72 மணி நேரத்தில் கிழக்கு திசை காற்றில் நிலவும் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும்,கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டிஜிபி ஆபீஸ் (சென்னை) 10 செமீ, அண்ணா யூனிவர்சிட்டி (சென்னை ), கும்மிடிப்பூண்டி(திருவள்ளூர்) ,சிதம்பரம் AWS (கடலூர்) தலா 6 செமீ, ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை ),பொன்னேரி (திருவள்ளூர்),அண்ணா யூனிவர்சிட்டி ARG (சென்னை ) தலா 5 செமீ, ஆலந்தூர் (சென்னை), காயல்பட்டினம் (தூத்துக்குடி). பரங்கிப்பேட்டை(கடலூர்),சிதம்பரம் (கடலூர்) தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது