Tamilnadu

“நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” - அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி துறையை ஏன் ஏற்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஏரி, குளங்கள், குட்டைகள், நீர் வழிப்பாதைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருப்பதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, மழைக்காலங்களில் வெள்ளம் போன்ற இன்னல்களும் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று விசாரித்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்துறை அல்லது தனி அமைப்பை ஏன் ஏற்படுத்தக்கூடாது என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வருங்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தனர்.

மேலும், கடந்த 1980ம் ஆண்டு தமிழகத்தில் ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட எத்தனை நீர்நிலைகள் இருந்தன. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆகியவை குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “ஊரடங்கால் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்” - மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வேதனை!