Tamilnadu

“கூடுதல் கட்டணம் செலுத்தினால்தான் உடலை தருவோம்” - இறந்தவர் குடும்பத்தினரை மிரட்டும் தனியார் மருத்துவமனை!

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது நாள் ஒன்றுக்கு ரூபாய் 70 ஆயிரம் மருத்துவமனைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட வெங்கடேசனின் குடும்பத்தினர் அங்கு அவரை அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணி அளவில் நெஞ்சு வலியின் காரணமாக வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருநாள் கட்டணம் ரூபாய் 70 ஆயிரம் என மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில், ஒரு லட்சம் வரை வெங்கடேசன் குடும்பத்தினரிடம் பெற்றதாகத் தெரிகிறது.

மேலும் கூடுதலாக ரூபாய் 50,000 வரை பணம் செலுத்தினால் மட்டுமே உயிரிழந்த வெங்கடேசனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியும் என்றும் மிரட்டும் தோரணையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேசுவதாக வெங்கடேசனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றை பயன்படுத்தி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையிலும் பல்வேறு புகார்கள் கிளம்பியும் இதுவரை நடவடக்கை எடுக்கப்படவில்லை.

ஒருசில தனியார் மருத்துவமனைகள் நோய்த்தொற்றை பயன்படுத்தி இன்னும் கூடுதலான கட்டணம் வசூலித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகளுக்கு தெரிந்தே இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Also Read: “தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க மறுக்கும் தமிழக அரசு”: அ.தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம்!