Tamilnadu

RTI கேள்விக்கு இந்தியில் பதில்: நேருவின் உறுதிமொழியை உதாசீனப்படுத்தும் பாஜக அரசு-காங்கிரஸ் கடும் கண்டனம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மோடி அரசின் ஆயுஷ் அமைச்சகம் தலை முதல் கால் வரையில் இந்தியிலேயே பதிலளித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதும், அதை எதிர்த்து தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் ஒலிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தியை திணிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த முயற்சியிலிருந்து மத்திய பா.ஜ.க. அரசு பின்வாங்கியது.

சில நாட்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி. துறையின் உதவி ஆணையாளர் வி. பாலமுருகனிடம் இந்தியை பரப்புவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்தி அறியாத அவரிடம் இந்தியை பரப்புகிற பொறுப்பு ஒப்படைத்தது குறித்து அவர் கண்டனத்தை பதிவு செய்ததை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கு பிறகு அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, பழிவாங்கும் போக்கோடு நடத்தப்படுகிற நிலை ஏற்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களை 'இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா ?' என்று சென்னை விமான நிலைய பணியாளர் கேள்வி கேட்கிற துணிச்சல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய துணிச்சலை வழங்கியது யார் ? அதேபோல விவசாயிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில விவரங்களை கேட்ட போது, அதற்கான பதில்கள் இந்தியில் தான் அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வழக்கறிஞர் எஸ்.குமாரதேவன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதியிட்ட கடிதத்தில் 2014-15 முதல் 2020-2021 வரை ஆயுர்வேதா, சித்தா, யுனானி துறைகளுக்கு தனித்தனியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு ? அந்த துறைகளில் இருக்கும் மருத்துவ மையங்கள் எத்தனை ? என்கிற விவரத்தை கேட்டிருந்தார். இந்த கடிதம் மத்திய சுகாதாரத்துறை மூலமாக உத்தரபிரதேச ஆயுஷ் அமைப்பிற்கு அக்டோபர் 27 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

Also Read: “ஆதார் அட்டையில் இருந்து தமிழ் மொழி வாசகம் நீக்கம்” : மோடி அரசின் இந்தி திணிப்பு குறித்து புகார்!

இந்த துறையிடமிருந்து இந்தியில் பெறப்பட்ட கடிதத்தை ஆயுஷ் அமைச்சகம் வழக்கறிஞர் எஸ்.குமாரதேவனுக்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அந்த கடிதத்தின் கவரில் கூட முகவரி இந்தியில்தான் எழுதப்பட்டுள்ளது. அதை ஆங்கிலத்தில் புரிந்து கொண்டு அஞ்சல் ஊழியர் வழக்கறிஞர் குமாரதேவனிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்தியில் எழுதப்பட்ட இந்த கடித போக்குவரத்து தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தி பேசாத மக்களுக்கு 24.4.1963 இல் பிரதமர் நேரு, 'ஆங்கிலம் துணை மொழியாகவும், மாற்று மொழியாகவும், மக்கள் விரும்பும்வரை தொடர்ந்து இருக்கும். அதை தீர்மானிக்கும் பொறுப்பை இந்தி மொழி அறிந்த மக்களிடம் விடாமல், இந்தி மொழி அறியாத மக்களிடமே விடுவேன்' என்று உறுதிமொழி வழங்கினார். அந்த உறுதிமொழியின் அடிப்படையில் ஆட்சிமொழிகள் மசோதா 1967 இல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

ஆட்சி மொழிகள் திருத்த சட்டத்தின்படி, 'இந்தி மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலத்திற்கும், அதை ஏற்காத மாநிலத்திற்குமான செய்தித் தொடர்பில் இந்தி பயன்படுத்தப்படுமாயின், அந்த செய்தி தொடர்புடன் ஆங்கில மொழி பெயர்ப்பு 'கட்டாயமாக' இணைக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது'.

இந்த பாதுகாப்பு அம்சங்களை முற்றிலும் புறக்கணிக்கிற வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.குமாரதேவன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட விவரங்களுக்கு ஆங்கிலத்தில் பதில் தராமல், இந்தி மொழியில் பதில் அனுப்பியது ஆட்சி மொழி திருத்த சட்டத்திற்கு விரோதமானது. நேரு கொடுத்த உறுதிமொழியை பா.ஜ.க. அரசு உதாசீனப்படுத்தி, அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்கிற முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது பாரதியாரின் கவிதைகளையோ, திருக்குறளையோ மேற்கோள் காட்டுகிற அதேநேரத்தில் இன்னொரு பக்கம் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. இது பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை உறுதிப்படுத்துகிறது.

அதேபோல, இந்தியாவை இணைக்கக் கூடிய மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பேசியதை எவரும் மறந்திட இயலாது. பன்முக கலாச்சாரமும், பல மொழிகளும் கொண்ட இந்தியாவில், இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்ட பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய போக்குகளை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “கடிதம் மூலம் தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு” : மொழி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மோடி அரசு !