Tamilnadu

கல்வெட்டுகளில் ‘தமிழ்’  இருக்கும்போது சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் ஏன்? - ஐகோர்ட் கிளை பளீர் கேள்வி!

கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களின் வயது மற்றும் காலங்களை கண்டுப்பிடிக்க கார்பன் டேட்டிங் சோதனைக்காக அமெரிக்காவின் ஃபுளோரிடா சோதனை மையத்திற்கு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் தொல்குடிகள் வாழ்ந்ததை ஆதாரங்களுடன் உறுதி செய்ய உதவும் வகையில், கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்கள், சிவகளை, கொந்தகை கிராமங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். மதுரையிலுள்ள சமணர் படுகை உள்ளிட்ட அடையாளங்களைப் பாதுகாக்கக்கோரி நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ், நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொல்லியல் துறை தரப்பில், "ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி, கீழடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் அறிக்கைகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூடியவிரைவில் அறிக்கைகள் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களில் 10 பொருட்கள் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக பரிசோதனை காலதாமதம் ஆகிறது. மேலும் தொல்லியல் துறை தரப்பில், " கொடுமணல் அகழாய்வில் 96 பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் நெடில் எழுத்துகள் கிடைக்கப்பெறாத நிலையில், கொடுமணல் அகழாய்வில் நெடில் ஆ, ஈ எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை சோதனைக்கு உட்படுத்த, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து கல்வெட்டுகளை படிமம் எடுப்பது தொடர்பான நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, " இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டுகள் படிவம் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கல்வெட்டுகளில் பல 15 அடிக்கு மேலாக இருப்பதால் அவற்றை படிமமெடுப்பதில் சிரமம் உள்ளது. அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன" என தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட புராதான பகுதிகளாக 92 இடங்கள் உள்ள நிலையில் புதிதாக 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் வயதை கார்பன் டேட்டிங் முறையில் கணித்த போது, கி.மு 696 to கி.மு 540 என்றும், கி.மு 906 முதல் 805 என தெரிய வருகிறது.

இதற்கிடையே, அதிக கல்வெட்டுகள் எழுத்துகள் தமிழ் மொழியில் இருக்கின்ற சூழலில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில், "மதுரை யானைமலை பகுதி சமணசமய அடையாளமாக பார்க்கப்படும் நிலையில், அங்கு புதிதாக, சிமெண்டாலான வழிபாட்டு அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் உடனடியாக அவற்றை அகற்றவும், பழங்கால சின்னங்களை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வு அறிக்கைகள் தாக்கல் செய்யாதது ஏன்? - அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி!