Tamilnadu

ஆன்லைன் ரம்மியில் புழங்கும் ரூ.25,000 கோடி : “இது எங்கு செல்கிறது? யார் கணக்கில் உள்ளது?” - ஐகோர்ட் கிளை

மதுரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இணையதளத்தில் பல்வேறு விதமான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் ஆகிய விளையாட்டுகள் அதிக அளவில் இணையதளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இளைஞர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்துது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தவர்கள், இந்த விளையாட்டுகளால் மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், நாகமீனாள் உள்ளிட்ட பலர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருப்பதாக கூறினர்.

இந்திய அளவில் ரம்மி விளையாட்டில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழங்குகிறது என மனுதாரர் புகார் கூறியுள்ளார். இந்த பணம் எங்கு செல்கிறது, யார் கணக்கில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு சட்ட வரையறை செய்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து தமிழக அரசு 10 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நம்புகிறது என கருத்து கூறி நவம்பர் 19ஆம் தேதி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர் பிரகாஷ் ராஜ், சுதீப், நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Also Read: “ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யவேண்டும்” : ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு!