Tamilnadu

“பெயர் இல்லாத சுவரொட்டிகள் சாதி, மத மோதலுக்கு வழிவகுக்கும்”: பதிப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தி.மு.கவிற்கு எதிராகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதைக் கண்டித்து கோவை மாவட்ட தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.

சுவரொட்டி எந்த பதிப்பகத்தில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரும், தொலைபேசி எண்ணும் அதில் இடம் பெறவில்லை. இதனால், காவல் துறையிடம் தி.மு.க சார்பில் புகார் அளித்தும் பதிப்பகத்தின் பெயர் இல்லாத காரணத்தால் அவர்களை கைது செய்யாமல் சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்து எந்த பிரிவின்கீழும் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.

இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கும் போது, சுவரொட்டிகளும் பதாகைகளும் தயாரிக்கும் பதிப்பகத்தின் பெயரும் தொலைபேசி எண்ணும் இடம் பெற வேண்டும் என்பது விதி, அப்படி பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாமல் சுவரொட்டி தயாரித்தாலும் ஒட்டினால் 2,000 ரூபாய் அபராதமும், ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையும் சட்டவிதி 12 இன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

இப்படி பெயர் பதிவிடாமல் அச்சிடும் பதிப்பகங்களின் செயல்களால் பிற்காலத்தில், மதம், இனம், மொழி பிரச்சனைகளுக்காக இதுபோன்ற சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு முயற்சி செய்பவர்களை ஊக்கப்படுத்துவது போல் உள்ளதாகவும், இதுபோன்ற சுவரொட்டிகளால் மிகப் பெரும் கலவரங்கள் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இதை தமிழக அரசு அலட்சியத்தோடு இல்லாமல் உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களின் உரிமத்தை பறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Also Read: அ.தி.மு.கவின் கரைவேட்டி கட்டாத நிர்வாகிகளாக செயல்படும் காவல்துறை: தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!