Tamilnadu

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : முசிறி அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் நவீன் (23), மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டி சேர்ந்தவர் கணேசன் என்பவரது மகள் ரிஜிபாலா (17).

இளைஞர் நவீன் கட்டிட வேலைக்காக பேருந்தில் சென்றபோது ரிஜி பாலாவுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 29ம் தேதி இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

மகள் ரிஜி பாலா காணாமல் போனது குறித்து கணேசன் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்நிலையில், காடுவெட்டி கிராமத்தில் ஊரின் எல்லையில் ஒதுக்குப்புறமாக இருந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு குடிசை வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களை பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என பயந்து ரகசியமாக தங்கியிருந்த வீட்டில் காதல் ஜோடிகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காலையில் அவ்வழியே சென்றவர்கள் இதனை பார்த்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை முசிறி போலிஸ் டி.எஸ்.பி பிரம்மானந்தன் பார்வையிட்டு புலன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

காதல் ஜோடிகள் அருகருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: “வேலை கிடைத்தால் உயிரை தருவதாக வேண்டிய நேர்த்திக்கடனுக்காக வங்கி அதிகாரி தற்கொலை” : பெற்றோர் அதிர்ச்சி !