Tamilnadu

விடிய விடிய பெய்த மழையால் வெள்ளக்காடான சென்னை.. மழைநீர் வடிகால் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தாது ஏன்?

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் சென்னை, புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடைவிடாமல் பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.

சாலைகளில் இருபுறமும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததாலும், குண்டும் குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கிய காரணத்தாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதேபோல் வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் வெளிச்சம் குறைவாக இருந்ததால் முகப்பு விளக்குகளை ஒளியவிட்டபடியே வாகனங்கள் இயங்கின. அண்ணாசாலையில் மாநகரப் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கியது.

மழை நீர் வடிகால் அமைப்பதற்குப் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த தமிழக அரசு இரவு முதல் பெய்த மழைக்குச் சென்னை நகர் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிப்பதன் மூலம் மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியாகி உள்ளதாகப் பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.