Tamilnadu

சாலைகளை சரிவர போடாமலேயே ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட தி.நகர் ரங்கநாதன் தெரு: காற்றில் பறந்த கொரோனா விதிகள்

சென்னையின் வர்த்தக மையமாக விளங்கும் தி.நகர், ரங்கநாதன் தெரு, ஊரடங்குத் தளர்வை அடுத்து, இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்நிலையில், ரங்கநாதன் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 92 லட்சம் ரூபாய் செலவில், 'எம் 40' கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பண்டிகை காலம் நெருங்கி வருவதையடுத்து, ரங்கநாதன் தெருவில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ரங்கநாதன் சாலையை, ஒருவழிச் சாலையாக மாற்றியுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் தி.நகர், உஸ்மான் சாலையில் இருந்து, ரங்கநாதன் தெருவில் நுழையும் மக்கள், பொருட்களை வாங்கி, ராமேஸ்வரன் தெரு அல்லது நடேசன் தெரு வழியாக, வெளியே செல்ல வேண்டும். மேலும், ரங்கநாதன் தெருவில், ஒருவழிப் பாதை என, நுழைவாயில் வடிவில், அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தெருவின் நுழைவாயிலில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கடை வீதிகளுக்கு வருகை தரும் பொதுமக்களில் பெரும்பாலோனோர் முகக் கவசங்கள் சமூக இடைவெளிகளைத் துளிகூட பின்பற்றவில்லை. மாறாக காவல்துறையும் அதனைக் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

பண்டிகை காலம் முடியும் வரை, ரங்கநாதன் தெரு, ஒருவழிப் பாதையாகப் பயன்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சாலைப் பணிகள் சரிவர நிறைவுபெறாமலேயே தி.நகர் ரங்கநாதன் தெரு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அதேபோல் மக்கள் வரவு குறைந்து அதன் காரணத்தினால் தெருவோர வியாபாரிகளும் ரங்கநாதன் தெருவில் கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களும் வியாபாரம் இல்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். எனவே சாலைகளை வேகமாகச் சீரமைத்தால் மட்டுமே மக்கள் தடை வீடுகளுக்கு வருவார்கள் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Also Read: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 79.09 லட்சமாக உயர்வு - நேற்று ஒரே நாளில் 45,148 பேர் பாதிப்பு ! #COVID19