கோப்புப்படம்
Tamilnadu

சாலையே போடாமல் தி-நகரை ஒருவழிப் பாதையாக்கிய சென்னை மாநகராட்சி.. கொரோனா பரவும் அபாயம் என வியாபாரிகள் வேதனை

ஊரடங்கு தளர்வை அடுத்து சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெரு, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பண்டிகை காலம் என்பதால், ரங்கநாதன் தெருவில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரங்கநாதன் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 92 லட்சம் ரூபாய் செலவில், 'எம் 40' கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமல்லாமல், ரங்கநாதன் சாலையை ஒருவழிப்பாதையாக மாநகராட்சி அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

இதனையடுத்து, தியாகராய நகர், உஸ்மான் சாலையில் இருந்து, ரங்கநாதன் தெருவில் நுழையும் மக்கள், பொருட்களை வாங்கி, ராமேஸ்வரம் தெரு அல்லது நடேசன் தெரு வழியாக, வெளியே செல்ல வேண்டும். மேலும், ரங்கநாதன் தெருவில், ஒருவழிப்பாதை என நுழைவாயில் வடிவில், அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது.

தெருவின் நுழைவு வாயிலில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், கடைகளுக்கு வருகை தரும் பெரும்பாலோனோர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை துளிகூட பின்பற்றாமல் இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

பண்டிகை காலம் முடியும் வரை, ரங்கநாதன் தெரு, ஒருவழிப் பாதையாக பயன்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சாலை பணிகள் சரிவர நிறைவு பெறாமலேயே ரங்கநாதன் தெருவை ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளதால் மக்களும் வியாபாரிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே சாலைகளை விரைவில் சீரமைத்து பழைய நிலையை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: தமிழகத்தில் கொரோனா : குறைகிறதா? குறைத்துக் காட்டப்படுகிறதா? - பொதுமக்கள் எழுப்பும் சந்தேகங்கள்! #Corona