Tamilnadu

கூட்டுறவு அங்காடியில் தரமற்ற வெங்காயம் விற்கும் தமிழக அரசு.. கொதிப்படைந்த பொது மக்கள்!

காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி திறந்த ஒரு மணி நேரத்திலேயே வெங்காயம் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்ததால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

வெங்காய விலை ஏற்றத்தை தொடர்ந்து அரசு சார்பில் காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி மூலம் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் தனி நபருக்கு இரண்டு கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்றும் தெரிவிப்பட்டது.

இதனால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடியில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். குறிப்பாக அரசு சார்பில் வழங்கப்படுவதாக கூறிய இரண்டு கிலோ வெங்காயம் காலை காமதேனு சிறப்பு அங்காடி திறந்தவுடன் 10 அல்லது 20 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதன்பின் வருபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே வழங்குவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் சிறப்பு அங்காடி திறந்த ஒரு மணி நேரத்திலேயே வெங்காயம் இருப்பு இல்லை என கூறி மக்களை திரும்பி அனுப்புவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி அரசு காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி மூலம் வழங்கக்கூடிய வெங்காயத்தின் தரமும் மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து உரிய நபர்களிடம் கேட்டால் விருப்பம் இருந்தால் வாங்கிச் செல் இல்லை என்றால் இடத்தை காலி செய் என்று மிரட்டும் தோரணையில் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் உள்ள ஊழியர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் பேசுவதாகவும் தெரிவிக்கின்றனர். இப்படி தரமில்லாத வெங்காயத்தை அரசு வழங்குவதற்கு வழங்காமலேயே இருக்கலாம் என்றும் மக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Also Read: “தங்கம் விலை உயர்வு போல் தினசரி விலை ஏற்றத்தில் வெங்காயம்”: அரசின் அலட்சியத்தால் பறிதவிக்கும் பொதுமக்கள்!