Tamilnadu

உண்மைகள் வெளிவராமல் தடுக்கவே விசாரணை ஆணையமா? - 9வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

விசாரணை முடிவடையாத நிலையில் அவ்வப்போது விசாரணை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பதவிக் காலம் இன்றோடு நிறைவடைகிறது.

இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இதனை ஏற்ற தமிழக அரசு, ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலத்தை நீட்டிப்பது இது 9வது முறையாகும்.

முழுமையாக மூன்று ஆண்டுகள் கடந்தும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், கண் துடைப்புக்காகவே விசாரணை ஆணையம் செயல்பட்டு வருவதாக பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

Also Read: “விசாரணை தாமதமாவதை வேடிக்கை பார்க்கிறது அரசு” - கால நீட்டிப்பு கோரும் ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு!