Tamilnadu

“அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் விரல்கள் பாதிக்கப்பட்ட கொடுமை” : முசிறி விவசாயி கண்ணீர் பேட்டி!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ,தா.பேட்டை அடுத்துள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமர் (65 ). இவர் கடந்த மாதம் மூச்சுத்திணறல் காரணமாக ராமர் திருச்சி தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ராமர் திருச்சி அரசு மருத்துவமனையில் செப். 21ம் தேதி உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமரின் வலது கை விரல்களில் நீல நிறமாக மாறி உள்ளது. பின்னர் விரல்கள் உள்ளங்கை ஆகிய இடங்களில் புண்ணாக மாறியதுடன் விரல்கள் கருத்து மிக மோசமாக தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமர் அங்கு சிகிச்சையை மேலும் தொடராமல் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த அக்டோபர் 3ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதுகுறித்து ராமர் கூறும்போது, “தனக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால், இடது கையின் விரல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்றதற்கு பாதிக்கப்பட்டுள்ள விரல்களை வெட்டி நீக்க வேண்டும் என கூறுகின்றனர். விவசாய கூலி வேலை செய்து வரும் நான் இதனால் மிகுந்த பாதிப்படைந்துள்ளேன்.

எனவே தமிழக அரசு எனக்கு இலவச உயர் மருத்துவ சிகிச்சையும், நிவாரண உதவியும் வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். மேலும் இதுதொடர்பாக மருத்துவத் துறை உயர் அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பி உள்ளதாகவும் விவசாயி ராமர் கூறியுள்ளார்.

விவசாயி ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எழுந்துள்ள குற்றச்சாட்டு சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தீ விபத்தில் நாசமான குடிசைகள்: வீடிழந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தி.மு.க” - நெகிழ்ச்சி சம்பவம்!