Tamilnadu

ராகவேந்திரா மண்டபத்துக்கு சொத்து வரி கட்டாத ரஜினிகாந்த்.. அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை!

ராகவேந்திரா திருமண மண்டபத்தின் சொத்து வரி நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால், வழக்கைத் திரும்பப் பெருவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகேந்திர திருமண மண்டபத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரானா தொற்று காரணமாக மார்ச் 24 ம் தேதி முதல் ராகேந்திர திருமணம் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைப்பெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 10 ம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸ் வைத்து சொத்துவரிக்கு விலக்கு அளிக்க வேண்டும், அபராதமோ, வட்டியோ விதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீஸ் அனுப்பப்பட்ட பத்து நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதோடு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. திரும்பப் பெறுவது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இதுகுறித்து இன்று நீதிமன்ற வழக்குகளின் முடிவில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.

Also Read: கொரோனா வைரஸ் குறித்து பொய் தகவல்களைப் பரப்பிய ரஜினி : வீடியோவை நீக்கிய ட்விட்டர் #Fakenewsrajini