Tamilnadu

இராணுவ வீரர் முல்லைராஜ் குறித்து தகவல் கிடைக்க உதவிடுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்!

ம.தி.மு.க பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது, தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முல்லைராஜ் என்ற இளைஞர், இந்தியப் படையில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற இடத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

அவர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டதாக, அவருடன் வேலை செய்கின்ற ஒருவர், இரண்டு நாள்களுக்கு முன்பு, அலைபேசியில் தகவல் கூறி இருக்கின்றார். அதன்பிறகு, அந்த அலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தியப் படையில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை.

இதனால் அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அவரது தாயார் அழகாத்தாள், இதுகுறித்து எனக்கு எழுதி இருக்கின்ற கோரிக்கை விண்ணப்பத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

முல்லைராஜ் இருப்பு உடல்நிலை குறித்து விசாரித்து, உரியத் தகவல் கிடைக்க உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தமது மின் அஞ்சல் கடிதத்தின் மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்.