Tamilnadu

ஷூ, செருப்புகளை குறி வைத்து ‘அபேஸ்’ செய்யும் பலே திருடன்... சென்னையில் ருசிகர சம்பவம்!

சென்னை சூளை பகுதி ஸ்டேட் பேங்கில் கேஷியராக பணிபுரிந்து வரும் சந்தானம் என்பவர் அதே பகுதியில் உள்ள வெங்கடாசலம் தெருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இவரது வீட்டில் ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று ஜோடி புதிய செருப்பு மற்றும் ஷூக்கள் காணாமல் போயுள்ளன. இதனால் இவரது குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர் ஒருவர் மாலை 4 மணி அளவில் இவரது வீட்டுக்குள் வந்து ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று ஜோடி புதிய செருப்பு மற்றும் ஷூக்களை திருடி பிளாஸ்டிக் பைகளில் போட்டு எடுத்துச் செல்வது தெரியவந்தது.

ஏற்கனவே இரண்டு முறை இவரது வீட்டில் இதுபோல புதிய ஷூக்கள் மற்றும் செருப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால், இந்த முறை, இந்தச் சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் இவர்கள் நேற்று புகார் அளித்தனர்.

குறிப்பாக கடந்த 2 மாதங்களில் வெங்கடாசலம் தெரு, பேக்கர்ஸ் சாலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தொடர்ச்சியாக செருப்பு மற்றும் ஷூக்களை திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேப்பேரி, பெரியமேடு ஆகிய பகுதிகள் செருப்பு கடைகளுக்கு பிரசித்தி பெற்றவை என்பதால், புதிய செருப்புகளை திருடி அப்பகுதிகளில் சில கடைகளில் விற்று அதன் மூலம் திருடர்கள் சம்பாதித்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: போலியான பெயரில் மாஸ்க் தயாரித்து கைதான ‘நேர்மை’நாதன் உள்ளிட்ட 3 பேர் - திருப்பூரில் மோசடி!