Tamilnadu

போதிய நிதி இருக்கும் போது கோவில்களிடம் இருந்து உபரிநிதி கேட்பது ஏன்? - அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி

தமிழகம் முழுவதும் உள்ள கிராம கோவில்களின் மேம்பாட்டுக்காக பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை செலுத்தும்படி அறநிலைய துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, கோவில் உபரி நிதியை பெற அறநிலைய துறை ஆணையர் ஒப்புதல் மட்டுமே அளிக்க முடியும் எனவும், அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அறநிலைய துறைக்கு 488 கோடி இருக்கும் நிலையில், கோவில் உபரி நிதியில் இருந்து கொடுக்க வேண்டியதில்லை எனவும், பயன்பெறும் ஆயிரம் கோவில்களின் பட்டியல் வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

கோவில்களின் பூஜை உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் போதுமானதாக இருக்கும் எனவும், கோவில்களை சீரமைக்க இந்த நிதி போதாது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து பெறப்படும் 10 கோடி ரூபாய் நிதியில் சிறிய கோவில்கள் சீரமைப்பு எப்படி செயல்படுத்தப்பட உள்ளது?

எந்த அடிப்படையில் ஆயிரம் கிராம கோவில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது?

அறநிலைய துறையில் 488 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் பெறுவது ஏன்?

சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என எந்தெந்த கோவில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன?

எனக் கேள்வி எழுப்பி, இன்றுக்குள் விளக்கமளிக்க அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், இது அரசின் இலவச திட்டங்கள் போல இருக்க கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Also Read: தனியார் கல்விக் கட்டணங்களை அரசு கருவூலம் மூலம் ஏன் வசூலிக்கக்கூடாது? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!