Tamilnadu

விவசாய நிலத்தில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம் : மயான பாதையின்றி தவிக்கும் கிராம மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் தாலுகாவுக்குட்பட்ட கடலி கிராமத்தில், தாழ்த்பபட்ட சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இச்சமுதாய மக்களுக்காக, வராகநதி கரையோரம் அரை ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்துள்ளது. தற்போது அப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளதால் சிறிதளவு பகுதியே தற்போது மயான பகுதியாக உள்ளது.

இந்நிலையில், வராக நதியில் மழைக்காலங்களில் நீர் வந்தால் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது. மேலும், கிராமப்பகுதி வழியாக சடலத்தை செல்வதற்கும் எதிர்ப்புகள் அதிகம் உள்ளதால் கிராம மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உயிரிழப்பவர்களின் சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு பாதை இல்லாததால்,  நிலப்பரப்பில் விளைச்சல் உள்ள வழியாக சடலங்களை சுமந்து சென்று, அடக்கம் செய்யும் அவலநிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

விவசாய நிலத்தின் வழியாகவே சடலத்தை சுமந்து செல்வதால், விவசாய பயிர்கள் சேதம் ஆவதும் அவ்வழியாக சடலத்தைக் கொண்டு செல்லும் போது விவசாயிகள் அவர்களிடம் தகராறில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி உள்ளது.

இதனால், சுடுகாட்டு பாதை கிராம மக்களுக்கு அமைத்து தரக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடலி கிராம மக்களுக்கு நிரந்தர சுடுகாட்டுப் பாதையை அமைத்துத் தரவும் குடியிருப்பு அருகாமையிலோ மயானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தற்போது பல முன்னேற்றங்களை சமுதாயம் பெற்றுள்ள நிலையில், கடலிகிராம தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மயானபாதை இல்லாமல் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்வது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்டு சுடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: சுடுகாட்டுக்குப் போக வழி இல்லை : சாதி கொடுமையால் சடலத்தை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய அவலம் !