Tamilnadu

“இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பெற்றோர்களே காரணம்” - சென்னை ஐகோர்ட் அதிருப்தி!

காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக் கோரி, அவரது தாய் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே திருமணமான நபர்களின் சுயரூபம் மற்றும் உண்மை விபரம் தெரியாமல் இளம்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறுவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டுச் சென்றதாக 53 ஆயிரத்து 898 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெற்றோர்கள் தங்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததும், அவர்களுக்கு உரிய அன்பும் பரிவும் கிடைக்கப்பெறாததுமே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த விவகாரத்தில் மத்திய சமூக நலத்துறையை தாமாக முன்வந்து பதில் மனுதாரராக இணைத்த நீதிபதிகள், இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Also Read: தீண்டாமைக்கு எதிரான கண்காணிப்புக்குழுவை கூட்டாத தமிழக அரசு - உயர்நிலை கூட்டத்தை நடத்த ஐகோர்ட் உத்தரவு!