Tamilnadu

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் கிசான் திட்ட முறைகேடு: உதவி வேளாண் அலுவலர் சஸ்பெண்ட்!

பி.எம் கிசான் மோசடி : சிறு குறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகையாக ஆண்டுக்கு 6ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்தான் உழவர் உதவித்தொகைத் திட்டம்.

தமிழகத்தில் இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பல்லாயிரக்கணக்கானோர் முறைகேடாக வங்கிக் கணக்கு தொடங்கி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

தமிழகத்தில் திருவண்ணாமலை, மதுரை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 110 கோடி ரூபாய் அளவிற்கு இந்த முறைகேடு நடந்துள்ளது. இதனையடுத்து இந்த முறைகேட்டை சிபிசிஐடி போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் 6 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக 51 பேரிடம் சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்த திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்றவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 15 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, பெத்தநாயக்கன்பாளையம் உதவி வேளாண் அலுவலர் அன்பழகன், கார் ஓட்டுநர் பிரகாஷ் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து உதவி வேளான் அலுவலர் அன்பழகனைச் சேலம் மாவட்ட ஆட்சியர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.

Also Read: கிசான் திட்ட மோசடியில் ஆளுங்கட்சிக்கும் பங்கு? வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொன்முடி வலியுறுத்தல்!