Tamilnadu

வேலுமணி மீதான டெண்டர் வழக்கு: விசாரணையில் திருப்தியில்லை.. வேறு அமைப்புக்கு மாற்ற ஐகோர்ட் உத்தரவு!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதுகுறித்து உயர் நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அதே புகார் குறித்து வேறு விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட முடியுமா? எனவும், அந்த விசாரணை அமைப்பை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து செப்டம்பர் 28 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்துக்கும், தெரிவித்தும், அரசுக்கும் உத்தரவிட்டும், விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also Read: எடப்பாடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: இறுதி விசாரணை தேதியை அறிவித்தது சென்னை ஐகோர்ட்!