Tamilnadu

ஒரே விவசாய நிலத்தில் 2-வது முறை கசிந்த கச்சா எண்ணெய் - திருவாரூர் விவசாயியின் பரிதாப நிலை

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் என்ற ஊரில் உள்ள விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் கசிந்து பயிர்கள் நாசமாகியுள்ளன. காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு ஆலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தக் குழாய்கள் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழாய்களில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு விவசாய நிலங்களில் கச்சா எண்ணெய் கசிந்து பயிரை நாசமாக்கி வருகின்றன. தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த குழாய்களை நீக்கக் கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எருக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவரது நிலத்தில் தான் தற்போது கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் இதனால் நாசமாகியுள்ளன.

இது முதல் முறையல்ல, இதே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் கசிவு ஏற்பட்டதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையயே இன்னும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார் தனசேகரன். இரண்டாவது முறையும் கசிவு ஏற்பட்டுள்ளதால் மொத்தம் தனக்கு வர வேண்டிய இழப்பீட்டு தொகை 11 லட்சத்தை ஓ.என்.ஜி.சி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கிறார் அவர்.