Tamilnadu

100 நாள் வேலைதிட்டத்தில் டிராக்டர் ஏறி பலியான பெண் குடும்பத்தினருக்கு தி.மு.க மா.செ நேரில் சென்று ஆறுதல்!

பெரம்பலூர் மாவட்டம், திம்மூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலைக்குச் சென்றுள்ளனர்.

வேலைக்குச் சென்ற இடத்தில் ஜே.சி.பி.இயந்திரம் மூலம் டிராக்டரில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். 100 நாள் வேலை திட்டத்திற்காக மனித சக்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதும் இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்பதும் அரசு விதியாகும்.

திம்மூர் கிராமத்தில் 100 நாள் திட்டத்தில் வேலைக்குச் சென்ற இடத்தில் இயந்திரங்கள் மூலம் வேலை நடைபெற்றதால் ஜெயலெட்சுமி உள்ளிட்ட பெண்கள் வாகனத்தை மறித்துள்ளனர். அவசர, அவசரமாக இயந்திரங்களை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றதால் டிராக்டரில் சிக்கி ஜெயலெட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லாமல் தனியார் வாகனத்தில் ஏற்றி ஜெயலட்சுமியை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் செல்லும் வழியியே ஜெயலட்சுமி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்று 4 நாட்கள் ஆகியும் அரசு அதிகாரிகள் ஜெயலட்சுமி வீட்டுப் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தி.மு.க.சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஜெயலட்சுமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ.30 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: “இதுவும் ரூ.15 லட்சம் தருவதாகச் சொன்ன வாக்குறுதி போன்றது தான்” - ப.சிதம்பரம் காட்டம்!