Tamilnadu

மகளின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் நெசவாளர் தற்கொலை : காஞ்சிபுரத்தில் நடந்த சோகம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வடக்கு மாட வீதியை சேர்ந்த சங்கர், மனைவி பவானி, மகன் சரவணன் மற்றும் மகள் மீனாட்சி ஆகியோருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். நெசவுத் தொழிலாளியான இவர் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா காலத்தில் வேலையின்மை காரணமாக கடும் கஷ்டத்தில் இருந்துள்ளார்.

மேலும் இவரது மகள் மீனாட்சி காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குடும்பத்தில் சற்று சலசலப்பு நிலவிய நிலையில், வேலை கிடைக்காதது மற்றும் மகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த இயலாமல் போய்விடுமோ என மன உளைச்சலில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு சங்கர் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலிஸார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி காஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டு தொழிலுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் கடந்த ஆறு மாத காலமாகவே அணைத்துவிட்டு நெசவுத்தொழில் முடங்கிய நிலையில், வாரியத்தில் உறுப்பினராக உள்ள உறுப்பினர்கள் மட்டுமே உதவித்தொகை வழங்கப் பட்ட நிலையில் இது போன்று பல நெசவாளர்கள் வேலை இன்மை காரணமாக பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மோடி ஆட்சியில் தொடரும் திண்டாட்டங்கள் : வேலையின்மை 6.1 சதவிகிதமும்; தற்கொலை 3.4 சதவிகிதமும் அதிகரிப்பு!