Tamilnadu

ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க சாக்கடை சுத்தம் செய்யும் மாணவன்!

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன.

அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், இணைய வழி கற்பித்தல் முறையைப் பின்பற்றி வரத் தொடங்கியுள்ளன. இதில் மழலையர் பள்ளி தொடங்கி, பள்ளிக் கல்வி இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி கற்பித்தல் என்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்ற நிலை தொடர்கிறது.

மேலும், இணையவழிக் கல்வி ஆபத்தானது என்றும், அது மாணவர்களுக்கிடையே பாகுபாட்டினை வளர்க்கும், இணைய வழிக்கல்வி வகுப்பறை கல்விக்கு மாற்றானது அல்ல என்றும் தி.மு.க., தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான மொபைல், இணைய வசதி மற்றும் தொலைக்காட்சி போன்ற எந்த வசதிகளும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது அரிதான ஒன்றாக மாறிப்போயுள்ளது. அதுமட்டுமல்லாது செல்போன் இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத வருத்தத்தில் மனமுடைந்து பலர் தற்கொலை செய்துக் கொள்ளும் அவலம் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.

இதனால் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பால் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் சாக்கடைக் கழிவுகளை சுத்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் சாம் என்னும் மாணவன் ஆன்லைன் வகுப்பு படிக்க செல்போன் வாங்க பணம் இல்லாததால், கோயம்பேட்டில் சாக்கடை கழிவுக்குள் இறங்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் பிரபல ஆங்கில நாளிதலில் வெளியானது. இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து, இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையத்தளத் தொடர்பு, கணினி, ஸ்மார்ட் போன் போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா?, ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைதள் இருப்பவர்களுக்கு தனித்தனியே அனைத்து வசதிகளுக்கும் உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “கருகும் பிஞ்சுகள்... இருளும் எதிர்காலம்”: உயிர் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் - எப்போது பேசப்போகிறீர்கள்?