Tamilnadu

செலவு கணக்கை ஈடுகட்ட கொரோனா இல்லாதவர்களுக்கு பாசிட்டிவ் முத்திரை: எடப்பாடி அரசின் கொரோனா கொள்ளை அம்பலம்!

கன்னியாகுமரியில் பெண் ஒருவருக்கு சோதனை மேற்கொள்ளாமலேயே கொரோனா இருக்கிறது எனக் கூறி, 2 நாட்களாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அகஸ்தீஸ்வரம் அருகே, ஈச்சன்விளை பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் கால் வலிக்காக சிகிச்சை பெற அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, சர்க்கரை நோய்க்காக ரத்த மாதிரியை சேகரித்துள்ளனர்.

அதில், அப்பெண்ணுக்கு கொரோனா இருக்கிறது என மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அதிர்ச்சியில் அந்த பெண்மணி மயங்கியிருக்கிறார். பின்னர், தனியாரிடம் சளி மாதிரியை கொடுத்து சோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இல்லையென முடிவு வெளியாகியிருக்கிறது.

இருப்பினும், 2 நாட்களாவது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மற்றும் காவல்துறையினர் அப்பெண்ணை வற்புறுத்தியிருக்கிறார்கள். வைரஸ் தொற்று இல்லாதபோது, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு பிற நோயாளிகள் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடும் என குடும்பத்தினர் அச்சமடைந்து மறுத்திருக்கிறார்கள்.

மேலும், செலவு கணக்கு காட்டுவதற்காக கொரோனா பாதிக்கப்படாதவர்களுக்கு தொற்று இருப்பதாகக் கூறி அரசு நாடகமாடுகிறதா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Also Read: “அ.தி.மு.க அரசுக்கே முதல் பரிசு” - எடப்பாடி பழனிசாமியின் பொய்களைப் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்!