Tamilnadu
அண்ணா பல்கலைக்கழக கிளை விவகாரம் : தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததை மாற்றியது ஏன்? - பொன்முடி MLA கேள்வி!
அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவுக்கு ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க உறுப்பினர்கள் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி, “கலைஞர் ஆட்சிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தால் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிப்பது கடினம் என்ற காரணத்தினாலேயே கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உறுப்பு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அனைத்தையும் ஒன்று சேர்த்து சென்னையிலேயே நிர்வகிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டது ஏன்" என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்ட முறைகேடு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசு தான் கணக்கெடுப்பு நடத்தும், மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்பு இருக்கும். மாநில அரசிற்கும் பொறுப்பு இருக்கிறது. விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்தப் பணம் போய் சேர்ந்துள்ளது.
110 கோடி ஊழல் என அமைச்சரே ஒப்புக்கொண்டுவிட்டார். ஒப்பந்த பணியாளர்களைத்தான் கைது செய்து இருக்கிறார்கள். இதில் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் பங்கு இருக்க வாய்ப்புள்ளது. இதனை சி.பி.சி.ஐடிக்கு பதிலாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை அண்ணா பல்கலைக்கழக கிளைகளை உருவாக்கினோம். அ.தி.மு.க அரசு பல்கலைக்கழக கிளைகளை ரத்து செய்து விட்டு சென்னையில் மட்டும் நிர்வகித்து வருகிறது.
தி.மு.க ஆட்சியில் இருந்ததைப் போல் ஐந்து இடங்களில் அண்ணா பல்கலைக்கழக கிளைகளை உருவாக்கினால் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிப்பதற்கு எளிதாக இருக்கும். சில திருத்தங்களை மேற்கொண்டு கலைஞர் கொண்டுவந்தது போலவே உறுப்பு பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தி இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஏ.ஐ.சி.டி.இ கடிதம் எழுதி இருப்பதாக அவரே தெரிவித்து இருந்தார். ஆனால் இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் தனிப்பட்ட முறையில் சூரப்பா கடிதம் எழுதி இருக்கிறார் என தெரிவிக்கிறார்.
அரியர் மாணவர்கள் விவகாரத்தில் விவரம் தெளிவாக இல்லை. பணம் கட்டாத மாணவர்களுக்கு பணம் செலுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு அரசு என்ன பதில் தெரிவிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !