Tamilnadu

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம்.நடராசன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம்.நடராசன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அய்யா கே.எம்.நடராசன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான அவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமானவர்.

பழகுவதற்கு இனிமையான அவர், 1983 முதல் 1994 வரை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர். ஏழை எளியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட அவரை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நான்கு முறை கழக ஆட்சியில் நியமித்து அழகு பார்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரும்பாடுபட்ட அய்யா கே.எம்.நடராசன் அவர்களின் மறைவு இந்தத் தருணத்தில் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் - உறவினர்களுக்கும் - அவரோடு பணியாற்றிய சக நீதியரசர்கள், வழக்கறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.