Tamilnadu

போக்குவரத்து போலிஸாரின் லஞ்சத்தால் உயிரிழந்த இளம் தம்பதியினர் - சென்னையில் நடந்த கொடூரம்!

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்(31) மற்றும் இவர் மனைவி பனாசீருடன்(28) எண்ணூரில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, எண்ணூர் விரைவு சாலை முழுவதும் கண்டெய்னர் லாரிகளின் ஆக்கிரமிப்பினால் எவ்வாறு செல்வது என்று திகைத்துப் போயுள்ளனர்.

அனைத்து வழிகளிலும் கண்டெய்னர் லாரிகள் நின்று கொண்டிருந்ததால் பொறுமையாக சென்று கொண்டிருந்த இளம் தம்பதிகளை முந்திச் செல்ல பின்னே வந்த கண்டெய்னர் லாரி வேகமாக செல்லவே அவர்கள் மீது மோதியது. இரண்டு கண்டெய்னர் லாரிகளுக்கு நடுவே சிக்கி கொண்ட இளம் தம்பதியினர் மீது டயர் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலிஸார் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் லஞ்சமாக கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களும் பெற்றுக்கொண்டு அனைத்து வழித்தடங்களிலும் கண்டெய்னர் லாரிகளை விடுவதினால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறி, உடனடியாக கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெகுநேரம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த நபர்கள் அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட கண்டனர் லாரிகளை கற்களால் வீசி அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி உறவினர்களிடம் சமாதானம் செய்து சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்பு மறியலை கைவிடப்பட்டு உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

மாதவரம் மஞ்சம்பாக்கத்திலிருந்து இருந்து எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகத்துக்கு செல்லும் லாரிகள் எண்ணூர் விரைவு சாலையில் மட்டும் 4 இடங்களில் நிறுத்தி போக்குவரத்து போலிஸார் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு பொதுமக்கள் செல்லும் சாலையில் அனுப்பி வைப்பதால் தினம்தினம் இதுபோன்ற உயிர் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

போக்குவரத்து போலிஸாரின் அலட்சியத்தினாலும், லஞ்சம் வெறியினாலும் இளம் தம்பதியினர் மீது கண்டெய்னர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த இளம் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

Also Read: விசாரணைக்குச் சென்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை: போலிஸார் அடித்தால் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி புகார்!