Tamilnadu

40%-க்கு மேல் கட்டணம் வசூலிப்பு: தனியார் பள்ளிகள் மீதான நடவடிக்கை என்ன? தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள், 75 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் எனவும், ஆகஸ்ட் இறுதிக்குள் 40 சதவீத கட்டணமும், மீத தொகையை பள்ளிகள் திறந்த பின் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறி, பள்ளிகள் மொத்த கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கும் பள்ளிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, அந்த பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்யவும் அரசுத்தரப்புக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்து கடந்த ஏப்ரல் 20 ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை தளர்த்தக் கோரி தமிழ்நாடு நர்சரி, தொடக்கப்பள்ளி, மெட்ரிகுலேஷன், மேல் நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்றூ விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி நிறுவனங்கள், 40 சதவீத கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி, 40 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டணம் வசூலித்த பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 7 ம் தேதிக்குள் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

அதேபோல, சி.பி.எஸ்.இ., மண்டல இயக்குனரும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: சிலைக்கடத்தல் வழக்கு : 41 ஆவணங்கள் மாயம்... ரூ.400 கோடி மோசடி : தமிழக டி.ஜி.பி-க்கு ஐகோர்ட் நோட்டீஸ்!