Tamilnadu

நெல்லையில் 15 நாள் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம்.. கொரோனாவை வைத்து கபளீகரம் செய்யும் தனியார் மருத்துவமனை..!

நெல்லை மேலப்பாளையம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா என்பவர் கேபிள் டிவி ஆப்ரேட்டராக உள்ளார். கடந்த 13-ந்தேதி இவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், மேலப்பாளையத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்.

அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கடந்த 15-ந்தேதி முத்தையா நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டரில் வைத்தும் சிகிச்சை பலனின்றி முத்தையா உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக ஏற்கனவே ஏழரை லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில் மேலும் நான்கரை லட்சம் ரூபாய் செலுத்தினால்தான் உடலை தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதனால் அவரது உறவினர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு ஆன்லைன் மூலம் புகாரை பதிவு செய்தனர். இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் பணம் கட்டாமல் உடலை தரமுடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டாதால் முத்தையாவின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்திருப்பின் அவரது உடலை உறவினர்களிடம் தராமால் சுகாதார பணியாளர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பதே வழக்கமாகும்.

இப்படி இருக்கையில் உண்மையிலேயே முத்தையா கொரோனாவால் பாதிக்கப்பட்டுதான் உயிரிழந்தாரா அல்லது அவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் தனியார் மருத்துவமனை அவ்வாறு வேண்டுமென்றே கொரோனா நாடகம் நடத்தியதா என்றும் ஐயப்பாடு எழுந்துள்ளது.