Tamilnadu

கொரோனா நோயாளி சென்ற 108 ஆம்புலன்ஸில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: தென்காசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்கள் இங்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்படவே அவரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவத்தனர்.

உடனடியாக அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி ஆக்சிஜன் சிலிண்டைரை திறந்த போது தீ பிடித்துள்ளது. உடனடியாக அவரை அவசர அவசரமாக கீழே இறக்கிய நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து தீயில் கருகி சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து தென்காசி போலிஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 78,761 பேர் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கையில் மோடி அரசு தோல்வி?