Tamilnadu

கொரோனாவால் இறந்த பாதிரியாரின் சடலத்தை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - ஆரணி அருகே பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்குபட்ட காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் பாதிரியார் ஜான் ரவி (52). இவர் அதே பகுதியில் தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜான் ரவிக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் ஜான் ரவிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா தனிவார்டில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலையில் ஜான் ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிரியார் ஜான் ரவியின் சடலத்தை ஆரணி அடுத்த குன்னத்துர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது குன்னத்துர் கிராம பொதுமக்கள் திடீரென ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து ஊரின் உள்ளே வரக் கூடாது என்று தடுப்பு வேலி அமைத்தனர்.

மேலும், இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருதரப்பினரையும் சமரசம் செய்து ஜான் ரவி உடலை கொரோனா நடைமுறையுடன் அடக்கம் செய்தனர்.

ஆரணி அருகே கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தபோது கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: “ஒருபக்கம் கைதட்டி கொண்டாட்டம் - மறுபக்கம் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு” : தொடரும் அவலம்!