Tamilnadu

அரசு உத்தரவை மீறி கடன் வசூலில் ஈடுபட்ட வங்கி : மனமுடைந்த வாடிக்கையாளர் வங்கியின் வாசலில் தீக்குளிப்பு!

வீட்டுக் கடனை உடனடியாக கட்ட வங்கி ஊழியர்கள் வற்புறுத்தியதால், மனமுடைந்த வாடிக்கையாளர் சிட்டி யூனியன் வங்கியின் வாசலில் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த ஆனந்த் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நாடு திரும்பி இங்கு தனியார் வெல்டிங் பட்டறையில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் வல்லம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியில் கடந்த 2015-ம் ஆண்டு வீடு கட்ட ரூ.9 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில், ரூ.13 லட்சம் வட்டியுடன் கடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளார். இந்நிலையில் மேலும் ரூ.6.5 லட்சம் கடன் தொகை நிலுவை இருப்பதாக வங்கியினர் ஆனந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து மதியம் வங்கிக்கு வந்த ஆனந்த் வங்கி பணியாளர்களிடம் சென்று ரூ.9 லட்சம் கடனுக்கு ரூ.13 லட்சம் செலுத்தியுள்ளேன். மேலும் 6.5 லட்சம் கட்ட தற்போது என்னால் முடியாது. கொரோனாவால் வேலை இல்லாமல் இருப்பதால் காலஅவகாசம் வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு வங்கி பணியாளர்கள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடன் தொகையை உடனடியாக கட்ட வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. கடன் தொகையை கட்ட தவறினால் வீட்டை பறிமுதல் செய்து ஏலம் விட்டுவிடுவதாக அவர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனவேதனையடைந்த ஆனந்த், வங்கி முன்பாக மண்ணெண்னையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து வல்லம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: “உணவின்றி வறுமையில் வாடிய நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை” : கொரோனா ஊரடங்கால் தொடரும் கொடூரம்!