Tamilnadu
“விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதியா? நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்” - ஐகோர்ட் கிளை எச்சரிக்கை!
தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசு கடந்த 13-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில் பிரதான இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ தடை விதித்து, அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்று தெரிவித்திருந்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் நீதிபதி பேசுகையில், “கொரோனா தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
மனுதாரர் மனுவை திரும்பப் பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும்” என எச்சரிக்கை விடுத்து, மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!