Tamilnadu
தடையை மீறி விநாயகர் சிலை வைக்கும் இந்து முன்னணி: தமிழகத்தில் வடமாநில அரசியலை முன்னெடுக்கிறதா ஆர்.எஸ்.எஸ்?
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசு அறிவித்த முறையற்ற ஊரடங்கு தளர்வால் குறைந்த பாதிப்பைக் கொண்டிருந்த தமிழகத்தின் தென்மாவட்டங்கள் தற்போது மிக அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில் கொரோனா தொற்றை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளதாக அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்டுதோறும் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், தமிழக அரசின் இத்தகைய அறிவிப்புக்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் தடையை மீறி ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும் என்றும், எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டாலும் நடத்தியே தீருவோம் எனவும் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவரும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்து முன்னணி, பா.ஜ.கவினர் இதுபோன்று வெளிப்படையாக அரசு அறிவிப்பை மீறி அறிக்கை வெளியிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே பெரியார் சிலை உடைப்பு, தலைவர்கள் சிலை அவமதிப்பு போன்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்கின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி அளித்தால் இந்துத்வா கும்பல் தமிழகம் முழுவதும் கலவரம் நடத்த வாய்ப்பு உள்ளது என்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “கொரோனா பேரிடரைக் கண்டுகொள்ளாமல் ஊரடங்கு விதிகளை மீறி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது.
அந்த விழா நடத்தியதால், ராமர் கோயிலின் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் கோபால் தாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட பிரதமர், மாநில முதல்வர் மற்றும் பா.ஜ.கவினருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளித்தால் தமிழகத்தில் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும். எனவே தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி நிகழ்வுக்கு அனுமதியளிக்கக் கூடாது. மத கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்முறையை ஏற்படுத்தும் நோக்கிலும் பேசி வரும் இந்து முன்னணி நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!