Tamilnadu

“ஆகஸ்ட் 17ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை” - தமிழக அரசின் அறிவிப்பால் பெற்றோர்கள் அச்சம்!

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

“நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு முழுவதுமாக வராத மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் தவிர மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அரச, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ம் தேதி முதல் தொடங்கும். 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ல் நடைபெறும்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் தணியவில்லை. இதனால் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை. கொரோனா தாக்கம் குறைந்ததும், மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்” எனத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து, தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தத் திட்டமிட்டிருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தி.மு.கவின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி”-சொத்தில் பெண்களுக்கு சமபங்கு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!